×

பெரியபாளையம் அருகே பொங்கல் பானைகள் செய்யும் பணி தீவிரம்: ரூ.50 முதல் ரூ.200 வரை விற்பனை

 

ஊத்துக்கோட்டை, டிச. 25: பெரியபாளையம் அருகே அகரம் கிராமத்தில் பொங்கல் பானைகளை செய்யும் பணிகள் தீவிரம் நடைபெற்று வருகிறது.  தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்கள் பொங்கல் பண்டிகையை புத்தாடை அணிந்து மண் பானையில் பச்சரிசி பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து வழிபடுவார்கள்.

இந்நிலையில், பொங்கல் வைத்து வழிபட மண் பானைகளை தயார் செய்யும் பணிகளில் பெரியபாளையம் அருகே அகரம், செம்பேடு, ஆரணி, தண்டலம் பாலவாக்கம் மற்றும் ஊத்துக்கோட்டை கலைஞர் தெரு, பஸ் நிலையம் எதிரிலும் ஊத்துக்கோட்டை அருகே புதுகுப்பம் போன்ற பகுதிகளிலும் மண்பாண்ட தொழிலாளர்கள் பொங்கலுக்காக மண்பானைகளை தயார் செய்யும் பணியில் மும்முறமாகவும், அதற்கு வர்ணம் பூசும் பணிகளில் தீவிரமாகவும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது: நாங்கள் 30 வருடங்களுக்கும் மேலாக இந்த மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம். மேலும், பொங்கல் பானைகள் செய்து அதற்கு வர்ணம் பூசி அதை உலர்த்தும் பணிகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். தற்போது, ஒரு பானையின் விலை ரூ.50 முதல் ரூ.200 வரை விற்பனையாகும். இந்த பானைகளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாங்கிச்செல்வார்கள் என கூறினர்.

The post பெரியபாளையம் அருகே பொங்கல் பானைகள் செய்யும் பணி தீவிரம்: ரூ.50 முதல் ரூ.200 வரை விற்பனை appeared first on Dinakaran.

Tags : Periyapalayam ,Uthukottai ,Akaram village ,
× RELATED பெரியபாளையம் பேருந்து நிலையத்தில்...